<p>விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.</p>
<h2>பொது சிவில் சட்ட மசோதா:</h2>
<p>இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார்.</p>
<p>இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு. சுமார் ஓராண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்தது. </p>
<p>இந்த அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக தயாரித்து உத்தரகாண்ட் அரசிடம் வழங்கியது. இதற்கு உத்தரகாண்ட மாநில அமைச்சரவையும் கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூட்டினார்.</p>
<h2>உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்:</h2>
<p>பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், நேற்று காலை சட்டப்பேரவையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நேற்றும், இன்றும் விவாதங்கள் நடைபெற்றது. </p>
<p>இந்த நிலையில், பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்கு பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட். </p>
<p>மசோதா குறித்து பேசிய முதல்வர் புஸ்கர் சிங் தாமி, ”திருமணம், சொத்துரிமை, விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்குமான சம உரிமையை பொது சிவில் சட்ட மசோதா வழங்கும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை ஒழிப்பதில் பொது சிவில் சட்ட மசோதா முக்கிய பங்காற்றும். இந்த மசோதா யாருக்கும் எதிரானது அல்ல. அனைவரின் நலனுக்காகவும், குறிப்பாக பெண்களின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார். </p>
<p>சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர், இது சட்டமாக்கப்பட்டு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று கூறுகின்றன. </p>
<h2><strong>சர்ச்சையை கிளப்பும் சட்டப்பிரிவுகள்:</strong></h2>
<p>சட்டப்பிரிவு 4இன் கீழ், திருமணம் செய்து கொள்ள மசோதாவில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்க்கைத்துணை உயிரோடு இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே, பொது சிவில் சட்டத்தின்படி இரண்டாம் திருமணத்திற்கும் பலதார திருமணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவை பொறுத்தவரையில் கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>
<p>லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். லிவ்-இன் உறவுக்கு வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையோடு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். மேலும், பதிவு செய்யும்போது தவறான தகவலை கொடுத்தால் மூன்று மாதங்கள் சிறை மற்றும ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. </p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















So, It gave me some useful insights. glad I found this honestly.