Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் களமிறங்கிய 21 பறக்கும் படை! கண்காணிப்பு தீவிரம்


<p>நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்&nbsp; பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது.</p>
<p><strong>நாடாளுமன்ற தேர்தல்</strong></p>
<p>தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.</p>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p>
<p><strong>பறக்கும் படை சோதனை</strong></p>
<p>வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.<br />இந்நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p><strong>21 பறக்கும் படைகள் அமைப்பு</strong></p>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படைகள் மற்றும் தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக்குழு வீதம் 21 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படை குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 3 போலீசாரும், நிலையான கண்காணிப்புக்குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 2 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.</p>
<p><strong>சோதனை தொடங்கியது</strong></p>
<p>இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக் குழுவினர் &nbsp;மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தின் முக்கிய சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை யாரேனும் &nbsp;கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் 8 மணி நேர முறைப்படி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p>

Source link