Actor Mohan: இளையராஜா தெய்வம், மார்க்கெட் இல்லைனு கவலைப்பட மாட்டேன்.. நடிகர் மோகன் பளிச்!


<p>பிரபல 80ஸ் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ஹரா திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெள்ளி விழா நாயகனாக காதல் பாடல்களுடன், மைக்கும் கைய்யுமாக வலம் வந்த நடிகர் மோகன், இந்தப் படத்தில் துப்பாக்கி ஏந்தியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<h2><strong>ஹரா பட டீசர் ரிலீஸ்</strong></h2>
<p>குஷ்பு, வனிதா விஜயகுமார், அனுமோல், யோகி பாபு, சிங்கம்புலி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தினை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் நடிகர் மோகன் பேசியதாவது:&nbsp;</p>
<p>"எத்தனையோ படங்கள் நான் நடித்து ரிலீஸ் ஆகி இருக்கின்றன. ஆனால் நான் எப்பயும் பெருமையா கருதும் ஒரு சில விஷயங்கள இங்கே சொல்கிறேன். ஹரா தான் என் முதல் படம்னு சொல்லுவேன். இந்தப் படத்தோட வெற்றி, தோல்வி தான் அடுத்தக்கட்டத்துக்கு என்னை அழைத்துச் செல்லும். பல புது இயக்குநர்கள அறிமுகப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது இறைவன் எனக்கு கொடுத்த பிச்சை.</p>
<h2><strong>இளையராஜா தெய்வம்</strong></h2>
<p>தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு தான் நான் எப்போதும் நன்றி சொல்லுவேன். இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். பாட்டுகள் பத்தி எல்லாரும் சொல்றாங்க. இளையராஜா சார் தெய்வம். அவர் 1500 படங்கள் மேல் செய்துவிட்டார். என்னைப் பொருத்தவரை அவர் எல்லா நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என வஞ்சனை இல்லாமல் பிரமாதமான பாடல்களைக் கொடுத்துள்ளார்.</p>
<p>சில நடிகர்களின் சில பாடல்களை இன்றைக்கும் ரசிக்கிறார்கள். அந்தப் பாட்டை ஆர்.சுந்தர்ராஜன் மாதிரியான இயக்குநர் கனெக்ட் செய்ய வைத்திருக்கிறார். ஒரு பாட்டு வெற்றியடைய வரிகள், டியூன் மட்டும் காரணமில்லை. சூப்பர் ஹிட் ஆடியோக்கள் இருக்கும். ஆனால் படம் அவ்வளவு பெரிதாக ஓடி இருக்காது. ரசிகர்கள், ரசிகைகளின் ஆசிர்வாதம் தான் என்னுடைய படங்கள் ஓடியதற்கு காரணம்.</p>
<p>விதில வில்லனாக நடித்தபோது நம்ம மோகன் என்றார்கள், மௌன ராகம் படத்தில் நல்ல கணவனாக நடித்தபோது நம்ம மோகன் என்றார்கள். ரெட்டை வால் குருவியில் ரெண்டு மனைவியை சமாளிக்கும் கணவனாக நடித்தாலும் நம்ம மோகன் தானே என்றார்கள். அதற்கு அந்த இயக்குநர்கள் பட்ட கஷ்டம் தெரியும். அவர்கள் எல்லாரது இயக்கமும் ஆடியன்ஸை உட்கார வைத்தது, இளையராஜா சாரின் இசை மறுபடி மறுபடி கேட்க வைத்தது.</p>
<h2><strong>மார்க்கெட் பற்றி கவலையில்லை</strong></h2>
<p>மார்க்கெட் இல்லை என்பதைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை. எனக்கு செட்டானால் தான் நடிப்பேன். என்னை மதிக்கும் ரசிகர், ரசிகைகளை எப்போதும் அதிருப்திக்குள்ளாக்கக்கூடாது எனும் ஒரே நோக்கம் தான் எனக்கு உள்ளது. பணம் எல்லாரையும் போல் எனக்கும் தேவை. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை என என் அப்பா, அம்மா மூலம் தெரியும்.</p>
<p>இந்தக் கதை இன்னும் கொஞ்சம் புதுசா இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் ஸ்ரீயிடம் கூறினேன். அவர் ஈகோ பார்க்காமல் திருத்தம் செய்து 7ஆவது வெர்ஷனை தான் தற்போது படமாக எடுத்துள்ளோம். ஜெயிச்சுக் காட்டுவேன் எனும் மனதால் தான் இந்த பிரமாதமான ஸ்கிரிப்ட் வந்தது. பாலுமகேந்திரா, மகேந்திரன், சிங்கிதம் ஸ்ரீனிவாஸ், ஜெ.வில்லியம்ஸ் என பெரும் இயக்குநர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எல்லா மொழிகளிலும் எனக்கு கிடைத்த பாக்கியம் இது. இயக்குநர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ஸ்ரீக்கு சிறப்பான லைட்டிங், சவுண்ட் சென்ஸ் உள்ளது. அதைப் பார்த்து நான் பிரமித்தேன்.&nbsp;</p>
<p>மனோபாலா இன்று நம்முடன் இல்லை. அவன் என்னுடைய நண்பன். இந்தப் படத்தில் அவரும் நடித்துள்ளார். அவரது ஆன்மா இங்கு இருந்து நம்மை ஆசிர்வதிக்கும். இந்தப் படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன&rdquo; எனப் பேசியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>

Source link