புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்?

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தற்போது சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக என்எல்சி நிறுவனத்தின் மின் உற்பத்தி 800 மெகாவாட்ளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுரங்க விரிவாக்க பணிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பகுதியில் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் தற்போது சுரங்கம் 1 மற்றும் 1-ஏ விரிவாக்க பணிகளுக்காக புதியதாக நிலம் கையகப்படுத்துவதற்கு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் என்எல்சி இந்தியா நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சுரங்கம் 1 மற்றும் 1-ஏ விரிவாக்க பணிகளுக்காக தொப்பிலி குப்பம், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களில் தேவைப்படும் நிலத்தின் அளவையும் அந்த நில உரிமையாளர்களின் பெயர் அவர்களது சர்வே நம்பர் மற்றும் அந்த நிலத்தில் என்ன பயிர் உள்ளது எந்த மாதிரியான வீடுகள் உள்ளது என்பதெல்லாம் குறித்து அந்த விளம்பரத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளம்பரம் வெளியான 30 தினங்களுக்குள் தங்களுக்கு ஆட்சோபனைகள் இருந்தாலும் மறுப்பு தெரிவித்தாலும், அதனை நில எடுப்பு வருவாய் வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க தெரிவித்துள்ளது. இதற்கான விசாரணை வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தை தமிழக நில எடுப்புத் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts