Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது…

3 minutes

Read Time


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயகட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 70 கிலோ எடை கொண்ட கன்றுடன் கூடிய பசுமாடு வெள்ளி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தான் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு நெருக்கடியான நிலையிலும் கூட விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பதில் முக்கியத்துவம் அளித்தேன். சேலம் மாவட்டத்தில் 350 ஏக்கர் பரப்பில் கரிய கோவில் அணை உருவாக்கி தந்தவர் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். கை கான் வளவு திட்டத்திற்காக 30 ஆண்டு காலமாக இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர், கோரிக்கை வைத்து வந்தனர். இந்த திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கால்வாய் அமைக்க நிலம் கையக படுத்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அப்போது இந்த திட்டத்திற்கு நிதி பங்கீடு கொடுத்தவர்களுக்கும், நிலம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தின் மூலம் பத்தாயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகிறது. விவசாயிகள் மேம்பாட்டிற்காக ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தந்துள்ளோம். சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றினோம். திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள திட்டங்கள் மீண்டும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி தரப்படும். மேட்டூர் அணை உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றி தரப்படும்.
தமிழகத்தில் உள்ள 65 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் உள்ளனர். உணவு இல்லை என்றால் உயிர் வாழ முடியாது. அந்த உணவு உற்பத்தி செய்து தருபவர் விவசாயி. தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கோடி மதிப்பீட்டில் காய்கறி விற்பனை நிலையம் தொடங்கினோம். அங்குள்ள குளிர் பதனகிடங்கில் இருப்பு வைத்து, விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம்.
விவசாயிகளுக்காக பார்த்து பார்த்து நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கடுமையான வளர்ச்சி ஏற்பட்டது அப்போது விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து இந்தியாவிலேயே வறட்ச்சிக்காக அதிக அளவில் 9200 கோடி ரூபாய் நிவாரணம் தந்தது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் பொதுப்பணி துறையில் கட்டுப்பாட்டில் இருந்த 14,000 ஏரிகளில் 8000 ஏரிகள் குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரப்பட்டது அதேபோன்று ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 26 ஆயிரம் ஏரி குளம் குட்டைகள் தூர்வாரப்பட்டது இவை அனைத்தும் 180 கோடி நிதியில் விவசாயிகள் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இலவசமாக உரமாக பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டு காலத்தில் முதன்முறையாக தூர்வாரப்பட்டது. நாள் ஒன்றுக்கு 5000 லோடு மண் அள்ளப்பட்டு விவசாயிகள் பயன் பெற்றனர் ஆனால் இப்போது ஒரு லோடு மண் அள்ள முடியுமா?
அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த 45 கோடி அரசு செலவு செய்த்து. 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக ஆட்சியில் தந்தோம். 100 ஏரி நிரப்பும் திட்டம் முடக்கப்பட்டுள்ளது அது குறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பியும் அது கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. நான் விவசாயியாக இருந்தவன் விவசாயி படும் துன்பங்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதால் விவசாயிகள் குறித்த பிரச்சனைகளுக்கு சட்டமன்றத்தில் பலமுறை பேசி உள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நான் கேட்கும் கேள்விகளை ஒளிபரப்புவதில்லை மாறாக அதற்கு அளிக்கப்படும் பதிலை மட்டும் ஒளிபரப்புகின்றனர். பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். ஆனால் எந்த அமைச்சரும் அதற்கு பதில் அளிக்கவில்லை. சேலம் மாவட்டம் கெங்கவள்ளியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பூங்கா தந்தோம் அதற்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதனை பூட்டு போட்டு வைத்துள்ளனர். இது குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கி உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்போது உங்களது கோரிக்கை நிறைவேற்றி தரப்படும். ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில்தான் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளியில் படித்த 2020 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது விவசாயிகள் செழிப்படைவார்கள். மீண்டும் அவர்கள் மனம் குளிர்வார்கள்” என்று பேசினார்.

மேலும் காண

Source link

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports