late director g marimuthu’s wife emotional speech in recent interview


மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் கனவு இல்லத்தில் இன்னும் 2 மாதங்களில் குடியேறி விடுவோம் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். 
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், சேரன் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் மறக்க முடியாத நபராக மாறினார்.
ஆதி குணசேகரன் என்ற அவரின் கேரக்டருக்கு வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்கள் இருந்ததனர். இப்படியான நிலையில் மாரிமுத்து கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். 
மாரிமுத்து மறைவு இன்றளவும் யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத அளவுக்கு உள்ளது. யதார்த்த நடிப்பும், கணீர் குரலும் மாரிமுத்துவை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கச் செய்துள்ளது. இப்படியான நிலையில் மாரிமுத்து  கட்டி வந்த கனவு இல்லத்திற்கான பணிகள் அனைத்து முடிந்து குடியேறப்போவதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “மாரிமுத்து இறப்பு இழப்பில் இருந்து கொஞ்சம் மீண்டு விட்டோம். குழந்தைகளின் சப்போர்ட்டால் நன்றாக போய்விட்டது. இந்த 6 மாதத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிகள் வந்தால் அவர் இல்லை என வருத்தமாக இருக்கும். எல்லாரும் என்னிடம் எப்படி இப்படி தைரியமாக இருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். என் கணவருடன் இருந்து பழகி விட்டது. நமக்காக இல்லாவிட்டாலும் பசங்களுக்காக இருந்துதான் ஆக வேண்டும். 
என் கணவர் மாரிமுத்து செய்து கொண்டிருந்த விஷயங்களில் அந்த புதிய வீடு தொடர்பான பணிகள் முடிந்தது. இன்னும் 2 மாதங்களில் நாங்க அங்க போயிடுவோம். அதேபோல் வெளியே எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் அவருடைய கிஃப்ட் பொருட்களைதான் பரிசாக கொடுக்கிறோம். அவருடைய ஃபோன் இன்னும் என்னிடம்தான் உள்ளது. அவரின் ரசிகர்கள் ஃபோன் செய்து ஆறுதல் சொல்வது சந்தோசமாக இருக்கிறது. திருச்சியில் இருந்து ஒரு பெண் வாரம்தோறும் போன் செய்து வீட்டில் இருப்பவர்களை நலம் விசாரிப்பார். அதனைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Baby Ambili: நடிக்க அழைத்துச்சென்ற பால்வாடி ஆசிரியை.. மலையாள நடிகையின் ஆச்சரிய கதை

மேலும் காண

Source link