<p>உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். </p>
<p>பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.</p>
<p>ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால், அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.</p>
<h2><strong>அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப்-க்கு சிக்கல்?</strong></h2>
<p>அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் அப்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார். இதை தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற டிரம்பின் ஆதரவாளர்கள், அதன் மீது தாக்குதல் நடத்தினர்.</p>
<p>தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றம் மீது டிரம்ப் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து, கொலராடோ மாகாணத்தில் நடைபெறவிருந்த குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப் கலந்து கெள்ள கொலராடோ நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது.</p>
<h2><strong>உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?</strong></h2>
<p>கொலராடோ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டிரம்ப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் டிரம்ப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், "கொலராடோ நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது தடை விதிக்கவில்லை என்றால், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பிரதான கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களிக்க விடாமல் வாக்காளர்களை தடுத்து நிறுத்தியது போன்று அமைந்துவிடும்.</p>
<p>அமெரிக்க அதிபராவதற்கான தகுதியை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மாநில நீதிமன்றங்கள் அல்ல. இதை, பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்" என வாதிட்டனர். இதை ஏற்ற அமெரிக்க உச்ச நீதிமன்றம், டிரம்பின் மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள ஒப்பு கொண்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.</p>
<p>மைனே மாகாணத்தில் நடைபெற உள்ள குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் கலந்து கொள்ளவும் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைனே தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் ட்ரம்ப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















சாகட்டும்