Tamil Nadu MPs To Meet Home Minister Amit Shah – Will They Get The Requested Flood Relief? | Tamilnadu Mps – Amit Shah: கிடைக்குமா வெள்ள நிவாரணம்?

Tamilnadu Mps – Amit Shah: வெள்ள நிவாரண நிதியாக கோரிய 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க  கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.
கொட்டி தீர்த்த கனமழை:
கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின. இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணப் பொருட்களுடன், உதவித்தொகையாக ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையும், ஆய்வும்:
வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நிரந்தர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மாநில அரசின் குழு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநில அரசு மேற்கொண்ண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டினர். இதைதொடர்ந்து, டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்த்த்து தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். ஆனால், தம்ழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்:
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி இன்று நடைபெற உள்ள சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.

Source link