Pongal Buses: இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துவருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.