PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!


<p>ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.</p>
<p>சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார். &nbsp;பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.</p>
<p>183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ரன் எதுவும் இன்றி வெளியேற, அடுத்ததாக உள்ளே வந்த பிரப்சிம்ரன் சிங்கும் 4 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.&nbsp;</p>
<p>தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷிகர் தவான் 14 ரன்களுடன் நடையைக்கட்ட, ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 5 ஓவர்களுக்குள் 20 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.&nbsp;</p>
<h2><strong>சாம் கர்ரன் – சிக்கந்தர் ராஜா:</strong></h2>
<p>சாம் கர்ரனும் சிக்கந்தர் ராஜாவும் சொல்லி வைத்தார் போல் 22 பந்துகளை சந்தித்து தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் முறையே 29 மற்றும் 28 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அப்போது பஞ்சாப் அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.&nbsp;</p>
<p>தொடர்ந்து, 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த ஜிதேஷ் சர்மாவும் நிதிஸ் ரெட்டி வீசிய 16வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, பஞ்சாப் அணியின் கதை முடிந்தது என்றே தோன்றியது.&nbsp;</p>
<h2><strong>மீண்டும் இணைந்த அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடி:&nbsp;</strong></h2>
<p>குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வெற்றியை தேடி தந்த அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடி இந்த முறையும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கதகளி ஆட தொடங்கினர். கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கு அனுப்பி அசுர வைத்தனர். கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், உனத்கட் பந்துவீச வந்தார். முதல் பந்தை சிக்ஸருக்கு அசுதோஷ் அனுப்ப, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்து வைட்டாக விழுந்தது. மீண்டும் அடுத்த பந்து சிக்ஸருக்கு பறக்க, 4 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தேவையாக இருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை இந்த ஜோடி சேர்க்க, மீண்டும் ஒரு பந்து வைட்டாக விழுந்தது.&nbsp;</p>
<p>இப்போது கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அடுத்த பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, ஒரு பந்தில் 9 ரன்கள் என்ற நிலையில் ஷஷாங்க் சிங் ஒரு சிக்ஸர் அடித்து முடித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p>

Source link