Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி  இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கனிவான கவனத்திற்கு..
பொருள்: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரி..
வணக்கம்,
திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,
”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்தெரிபு தெரிபு குத்தின ஏறு..கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..”
என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.
மேலும், நேற்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன். ” என கோரிக்கை வைத்துள்ளார்.
சிறந்த மாடுபிடி வீரர், காளையின் உரிமையாளருக்கு கார் பரிசு: 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் மாடுபிடி வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மட்டுமே வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிபெறுபவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் கார்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு சிறந்த மாடுபிடி வீரராக பரிசுபெறும் வீரர்கள் எங்களது பொருளாதாரத்தை உயர்த்த கார் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் எல்லாம் தர வேண்டாம். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை கொடுத்தால் மட்டும் போதும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையேதான் இப்போது இயக்குநர் அமீரும் முன்வைத்துள்ளார். 
இதேபோல், முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கார் வழங்குவது அவர்களுக்கு எந்தவிதத்திலும் பொருளாதாரத்தை தராது. அதற்கு பதிலாக, அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் நெல் அறுவடை இயந்திர வாகனங்களை தரலாம் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார். 
 

Source link