திமுகவின் முதல்நிலைத் தலைவர்களில் ஒருவரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தனது அரசியல் பயணம் குறித்து பாதை மாறாப் பயணம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நெருக்கடி காலத்தில் இளைஞர் தி.மு.க.வை கோபாலபுரத்தில் நான் தொடங்கிய காலத்தில் இருந்து பாலுவை எனக்குத் தெரியும். தொடக்க காலத்தில் நானும் அவரும் வாங்க போங்க என்றும், சார் என்றும் அழைத்துக் கொள்வோம். அதன் பின்னர் வாப்பா போப்பா என அழைத்துக் கொண்டோம். அதன் பின்னர் வாடா பாலு, போடா பாலு என அழைப்பேன். அவரும் என்னை அப்படித்தான் அழைப்பார்.
ஆனால் இப்போது அப்படிக் கூற முடியுமா? நான் கட்சியின் தலைவர், அவர் நாடாளுமன்ற குழுத் தலைவர். ஆனால் இப்போது அவர் என்னை அப்படி கூப்பிட முடியுமா ? கூப்பிட்டால் நீங்கள் விட்டு விடுவீர்களா? இதை ஏன் சொல்கின்றேன் என்றால் என்னையும், பாலுவையும் இயக்கத்தையும் பிரித்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்தவர்கள். இந்த வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் வழித்தடத்தை மாற்றத்தான் இந்த பாதை மாறா பயணம்” என பேசினார்.