Jayalalitha Political Life Journey From Starting End As Mp Mla And Chief Minister Of Admk | Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு

பெரும் ஆளுமைகளின் தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். பத்தாவது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து காண்போம்.
அரசியல் பயணத்தில் பலமுறை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோதும், அஞ்சாது பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் மீண்டும் எழுந்து வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா.
இளமைக் காலம்:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கர்நாடக மாநிலத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஜெயராமன் மற்றும் தாயார் வேதவல்லி. சிறுவயதிலே தந்தை மறைந்ததையடுத்து, தாயார் சினிமாத்துறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்த பின், கல்லூரி படிப்பை தொடர நினைத்த ஜெயலலிதா, திரைத்துறையில் நுழைந்ததால் படிப்பை கைவிட்டார். வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருடைய கால் சீட்டுக்காக பலரும் காத்திருந்தனர், அந்தளவு புகழ் உச்சத்துக்கு சென்றார்.
அரசியல் நுழைவு:
திமுக-வில் கருணாநிதியுடன் முரண்பாடு ஏற்பட்டதால், கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர்  பிரிந்து சென்றார். பின்னர், 1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். இதையடுத்து, 1982 ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார் ஜெயலலிதா. 1983 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி கொள்கை பரப்பு செயலாளரானார். 

1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு, நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே அனைவரையும் வியக்க வைத்தார். அவரது ஆங்கில புலமையை கண்டு பலரும் வியந்தனர்.
Also Read: Power Pages-1: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!
எம்.ஜி.ஆர் மறைவு:
1987 ஆம் ஆண்டு  அதிமுக தலைவரின் எம்.ஜி.ஆர் மறைவானது, அதிமுகவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக ஜெயலலிதா அணி மற்றும் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அணி என்றும் இரண்டாக பிரிந்தது.  இந்நிலையில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டதையடுத்து,  சேவல் சின்னத்தில் ஜெயலலிதா அணியும், இரட்டை புறா சின்னத்தில் ஜானகி அணியும் போட்டியில் இறங்கினர். போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். ஆனால் , தேர்தலில் திமுக ஆட்சியை  கைப்பற்றியது. இதையடுத்து, கட்சி பணியிலிருந்து ஜானகி விலகுவதாக முடிவு எடுத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா:
அதையடுத்து, அதிமுக ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஒன்று சேர்ந்ததையடுத்து, தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்,  காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அதிமுக, 38 இடங்களில் வென்றது.
1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களில் மெகா வெற்றி பெற்றது.   இதையடுத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றார்

பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்ட ஜெயலலிதா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது.  அத்தேர்தலில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வியை சந்தித்தார். 1996 நாடாளுமன்ற தேர்தலிலும் 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 
வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா:
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்து களம் கண்டது. இக்கூட்டணி வெற்றி பெற்று, வாஜ்பாய் பிரதமரானார். பாஜவுடன் ஜெயலலிதாவின் உறவானது, ஆட்சி அமைந்தது முதல், அமைச்சரவை ஒதுக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அப்போது, அவர் டெல்லி சென்ற போது, எதற்காக டெல்லி செல்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். ”டெல்லி சென்று, பிரதமர் வாஜ்பாயின் பாஜக ஆட்சியை கலைக்க போகிறேன்” என சொன்னார்.  இதையடுத்து, பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். திமுக ஆதரவு அளித்தும் ஒரு இடம் என்ற வித்தியாசத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இந்த துணிச்சலான முடிவானது, பலரையும் வியக்க வைத்தது.
Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!
முதலமைச்சர் பதவி நீக்கம்:
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என தெரிந்தே தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் மீது தொடரப்பட்ட டான்சி வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் போட்டியிடாத நிலை இருந்தது. ஆனால், சாணிக்கியத்தனமாக யோசித்த ஜெயலலிதா,கருணாநிதி , தனக்கு வேண்டிய அதிகாரிகளை வைத்து போட்டியிடாமல் செய்கிறார் என்று அனுதாப வலை மக்கள் மனதில் ஏற்படும், அதனால் இப்படி செய்தார் என்று அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த முடிவு வேலை செய்தது, வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சரானார். பலரும் ஜெயலலிதாவின் சாணிக்கியத்தணத்தை கண்டு மிரண்டு போயினர்.

ஆனால் தண்டனை பெற்ற ஒருவர் முதலமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து 2001ல் பதவி விலகினார், அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.
வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதையடுத்து, 2002ஆம் ஆண்டு ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.
அடுத்ததாக 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது அதிமுக. அந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அதிமுக தோல்வியை தழுவியது.
2006ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் திமுக  ஆட்சியை பிடித்தது. 
மீண்டும் முதலமைச்சர் பதவி நீக்கம்:
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
1996 ஆம் ஆண்டு, ஜெயலலிதா மீது பாஜக சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில், சுமா 18 ஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இதனால் முதலமைச்சர் பதவிக்கான தகுதியை இழந்தார். இப்போதும், அவரது நம்பிக்கைக்கு உரியவராக கருதிய  ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்டது அதிமுக. அப்போது, 
” சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா?  என ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்டார்.

அந்த தேர்தலில் அதிமுக் 37 இடங்களில் வென்று சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா உட்பட 4 பேரின் தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓபிஎஸ்-பதவியை விட்டு கொடுக்க மீண்டும் முதல்வரானார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று,  6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா.  

இதையடுத்து 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் சாதனையாக பார்க்கப்பட்டது.
இறுதி காலம்:
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக் குறைவின் காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
இரும்பு பெண்மணியாகவும், அதிமுக தொண்டர்களால் அம்மா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு, அதிமுக கட்சி உடைந்தது. இன்றுவரை கட்சி சின்னம் தொடர்பான வழக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய அதிமுக நிலையை பார்க்கும் போது, இதைவிட மிகப்பெரிய சவால்களையும் எதிர்கொண்டு திறம்பட செயல்பட்டு கட்சியையும் ஆட்சியையும் தக்கவைத்திருந்ததை பார்க்கும்போது, ஜெயலலிதாவின் பலம் எப்படிப்பட்டது, ஏன் அவர் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார் என்பதை அறிய முடிகிறது.
Also Read: Power Pages-2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?  

Source link