<p>அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. வலுவாக இருந்த I.N.D.I.A கூட்டணியில், தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வரும் சூழலில், அதற்கு நேர் மாறாக பாஜக கூட்டணி வலுப்பெற்று வருகிறது.</p>
<h2><strong>நிதிஷ் குமார் வரிசையில் கூட்டணியில் இணைகிறாரா சந்திரபாபு?</strong></h2>
<p>பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்ல கடந்த மாதம் இணைந்தார். அந்த வரிசையில், ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>டெல்லிக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார். இதனால், நிதிஷ் குமாரை போன்று சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.</p>
<p>ஆனால், பாஜக கூட்டணியில் இணைய சந்திரபாடு நாயுடு தயக்கம் காட்டி வருவதாக தெலுங்கு தேச கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p>
<p>நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, பாஜக கூட்டணியில் இணைவதால் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் போய்விடுமோ என சந்திரபாபு நாயுடு அச்சப்படுவதாக கூறப்படுகிறது.</p>
<h2><strong>அடித்து ஆடும் பாஜக:</strong></h2>
<p>தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பு, அதாவது 2 வாரங்களுக்குள், கூட்டணி குறித்த முடிவை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவிடம் நட்டா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பாஜகவை இணைப்பதால் வரும் நன்மை, தீமைகளை தெலுங்கு தேசம் ஆராய்ந்து வருகிறது.</p>
<p>வரும் மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி நம்புகிறது. அதன் கூட்டணியில் இணைவது சில பலன்களை தந்தாலும், ஆந்திராவை பொறுத்தவரை பாஜகவுக்கு எந்த விதமான பலமும் இல்லை.&nbsp;</p>
<p>கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் 1 விழுக்காட்டுக்கு குறைவாகவே பாஜக வாக்குகளை பெற்றிருந்தது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைந்து ஜெகன் மோகன் அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாஜகவின் ஆதரவு இருந்ததாக தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் சிலர் நம்புகின்றனர். எனவே, சந்திரபாபு நாயுடு, என்ன முடிவு எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.</p>
<p>I.N.D.I.A கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியாறிய நிலையில், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளமும் வெளியேற உள்ளதாகக் கூறப்படுகிறது. I.N.D.I.A கூட்டணி பலவீனம் அடைந்து வரும் சூழலில், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரிய லோக் தளம் போன்ற முன்னாள் கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.</p>
<p>&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports