Lovers Day 2024 Tamilnadu Government Take Action to Implement Lovers Safety Act MK Stalin Annadurai DMK


பிப்ரவரி 14ஆம் தேதி என்றாலே உலகம் முழுவதும் காதல் திருவிழாதான். காதலர்கள் தாங்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் சந்தித்துக் கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலர் தினத்தில் சந்திதுத்து, அந்த தினத்தில் தனது காதலரிடம் கொடுப்பதற்காக பல நாட்களாக அலைந்து திரிந்து அல்லது தானே பல மணி நேரங்களோ பல நாட்களோ செலவழித்து ஏற்பாடு செய்த பரிசை எடுத்துக் கொண்டு, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களைப் போல் காதல் கொண்டவர்கள் தங்களது காதலரைச் சந்திக்கும் வரை அவர்கள் மனதில் கொப்பளிக்கும் அன்பை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. 

எதிர்க்கப்படும் காதலர் தினம்
என்னதான் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது எனக் கூறினாலும் ஒரு சில நாடுகள் காதலர் தினத்தை தங்களது மதத்திற்கு எதிரானது, தங்களது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறி எதிர்த்து வருகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வடக்கு மாநிலங்களிலும் மத்திய மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது எனவும் காதலர் தினத்தில் பொது இடங்களில் காதலர்களை அடையாளம் கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் என மிரட்டுவதும் இங்கு நடந்துள்ளது. 

இது போன்று தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், ஜாதி கட்சிகள் மற்றும் ஜாதிச் சங்கங்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ளது. ஒரு தினத்தை கொண்டாடுவது அல்லது ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. அதே நேரத்தில்  பாகுபாடு கற்பிக்காத சாதியாலும் மதத்தாலும் நமது சமூகம் இருந்தால் கூட பரவாயில்லை, பிரிவினையை, ஏற்றத்தாழ்வை கற்பிக்கின்ற சமூகமாக இந்திய சமூகம் இருப்பதாக வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. 
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருப்பது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நடைமுறைப்படுத்திய சாதி மறுப்பு திருமணச் சட்டம். அதாவது இந்து திருமணச் சட்டத்தின்படி சுயாமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வமானது. கடந்த 1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளது.  மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்த சுயமரியாதைச் சட்டபூர்வமானது இந்து திருமணச் சட்டத்தின்படி என்றாலும், அதன் பின்னர் காலங்கள் கிட்டத்தட்ட 57 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்த சட்டத்தினைப் பற்றி மாறி மாறி பேசும் திராவிடக் கட்சிகள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல் இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. 

முன்னுரிமை மட்டும் போதுமா?
சாதி மறுப்பு திருமணங்கள்  (சுயமரியாதைத் திருமணம்) செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், தங்களின் முன்னோடிகளில் பெரியாரையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் கூறிவருகின்றனர். அவர்கள் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தனர். அதற்கு காரணம் சாதி மறுப்பு திருமணங்கள் சாதி ஒழிப்பின் ஒரு வழியாக கருதியதால்தான். அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை, அரசு உதவித் தொகை என்றெல்லாம் அரசு அறிவித்த பின்னரும் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறும் சதவீதம் அதிகரித்துவிட்டதா என்றால், அதற்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். 
ஆணவக் கொலைகள்
தமிழ்நாட்டில் நடைபெறும் சாதி மறுப்பு திருமணங்கள் என்பது இரண்டு குடும்பத்தாரும் நேரடியாக கலந்து பேசி அந்த திருமணங்களை நடத்தி வைப்பது கிடையாது. மாறாக இங்கு நடைபெறும் பெரும்பான்மையான சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்தும் காதல் திருமணங்கள்தான். இப்படியான காதல் திருமணங்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கதுதான். அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் அங்கு பிரச்னையாக எழுவது பொருளாதார நிலை. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் யாரேனும் ஒருவர் வேறு சாதி எனத் தெரிந்தால், மேல் சாதி எனக் கருதும் தரப்பினர் இருவரையும் கொலை செய்யும் கேவலமான செயல்களையும் பார்க்க முடிகின்றது. திருமணம் வரை ஏன் செல்ல வேண்டும் மாற்று சாதியைச் சேர்ந்தவர்கள் இருவர் பேசிக்கொண்டு இருந்தற்காக, அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததுதானே. 

பண்பட்ட சமூகம்
இப்படியான நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மடல் அரசு காதல் திருமணம் அதாவது சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள், மத மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கென தனி பாதுகாப்புச் சட்டத்தினை இயற்ற வேண்டும் எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் கணிசமான அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் மார்க்சிய அமைப்புகளிடம் இருந்து எழாமல் இல்லை. தனிச் சட்டம் இயற்றுவது மட்டும் இல்லாமல் சமூகத்தை பண்படுத்தும் காதலர் தினத்தில், சாதி மறுப்பு திருமணத்தை கொள்கை முடிவாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு  காதலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்து தெரிவித்தால் மகிழ்ச்சி என்பதைக் கடந்து ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக தமிழ்நாடு விளங்க ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

மேலும் காண

Source link