“இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்” டி.எம்.கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்!


டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது:
மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சங்கீத கலாநி தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக இசை கச்சேரிகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு பாடகர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள மார்கழி இசை விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தேர்வுக்குழு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. 
இந்த சூழலில் கர்நாடக இசை கலைஞர்களான காயத்ரி ரஞ்சனி, “தவறான ஒருத்தருக்கு கர்நாடக இசைக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார் என்றும்,  அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.
பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது என்று  அடுக்கடுக்கான புகார்களை அறிக்கையின் வயிலாக கூறியுள்ளனர். மேலும், இந்த ஆண்டு மியூசிக் அகடாமி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை” என்றும் தெரிவித்தார். 
கர்நாடக இசையை ஒரு தரப்புக்குள் சுருக்கும் வகையில் பேசுவதாக ரஞ்சனி காயாத்திரிக்கு எதிர்ப்புகள் ஒருபுறம் கிளம்பியது. அதே வேளையில், எளிய மக்களிடம் கர்நாடக இசையை கொண்டு செல்லும் நோக்கில் பணியாற்றக் கூடியவர் டி.எம்.கிருஷ்ணா என்று ஆதரவு குரல்களும் வட்டமடித்து வந்தது. 
டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:
இந்த நிலையில், டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.  இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.
பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண

Source link