Poornima Ravi: அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்.. சினிமா துறையில் வலம் வர தொடங்கும் நடிகை பூர்ணிமா ரவி!


<p>நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா வரை தமிழ் சினிமாவில் இதற்குப் பல உதாரணங்களை சொல்ல முடியும். இவர்கள் இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் என்றாலும் சவாலான கதாநாயகி என்றாலும் சரி சிறப்பாக நடித்திருப்பார்கள். இவர்களைப் போலவே, பூர்ணிமா ரவி பல்வேறு ஊடக தளங்களில் வெவ்வேறு பாத்திரங்களில் திறனை வெளிப்படுத்தி, தனது அனைத்து முயற்சிகளிலும் நிரூபித்து வருகிறார். இதே ஆர்வத்தோடு தனது திறமையை இன்னும் செழுமைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.&nbsp;</p>
<p>சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான &lsquo;செவப்பி&rsquo; மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவர் தான் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டார். ஆனால் இப்போது, அவரை முதன்மைப்படுத்தி (female lead characters) நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.&nbsp;</p>
<p>தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார். இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். &rsquo;ஹீரோயின் மெட்டீரியல்’ என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.</p>
<h2><strong>யார் இந்த பூர்ணிமா ரவி..?</strong>&nbsp;</h2>
<p>வேலூரைச் சேர்ந்த பூர்ணிமா ரவி சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு விஐடி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் முதலில் நரிகூட்டம் என்ற யூட்யூப் சேனலில் நடித்து வந்தார். அதன்பிறகு, அராத்தி என்ற பெயரில் சொந்தமாக யூட்யூப் சேனலை தொடங்கு அதன்மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து அதே சேனலில் தனது நடன வீடியோக்களை பதிவேற்றி அவரது திறமையை வெளிப்படுத்த, இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவெடுத்தது. இப்படியான வீடியோக்கள் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதாக ரசிகர்கள் வீடியோவில் கருத்து தெரிவித்து வந்தனர்.&nbsp;</p>
<p>தொடர்ந்து யூட்யூப்பில் கிடைத்த வரவேற்பை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் விதமாக குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி, தனது முதற்படியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமான &rsquo;ஹே சண்டைக்காரி&rsquo; உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்தார். அதன் மூலம் பூர்ணிமா ரவிக்கு &rsquo;ப்ளான் பண்ணி பண்ணனும்&rsquo; படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிகர் பால சரவணனின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகதான் பூர்ணிமா ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு, 16 லட்சத்துடன் வெளியேறினார்.&nbsp;</p>

Source link