மறைந்த நடிகர் போண்டா மணியின் இறுதி ஊர்வலத்தில் மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஒருசிலரே பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்து மக்களிடம் பாராட்டை பெற்றவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. உடல்நலக்குறைவு காரணமாக பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தமிழ் சினிமாவில் இலங்கை தமிழ் பேசி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜூவின் பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். மருதமலை, வின்னர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் போண்டா மணியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.
இவர், கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமானதால், பொழிச்சலூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
காலை முதலே திரை திரையில் அவருடன் நடித்த சக நடிகர்களான நகைச்சுவை நடிகர்கள் பெஞ்சமின், சிங்கமுத்து, மீசை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, செந்தில், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி குடும்பத்தினருக்கு 1 லட்ச ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. நடிகர் செந்தில், பிளாக் பாண்டி உள்ளிட்டோரும் நிதிஉதவி வழங்கினார்கள்
மேலும் மறைந்த நடிகர் போண்டா மணியின் உடல் மாலை 4 மணியளவில், அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர், ஊர்வலமாக உடல் எடுத்து செல்லப்பட்டு, மாலை 5.30 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள நாகல்கேணி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
என்னதான் 350 திரைப்படத்திற்கு மேல் நடிகர் போண்டாமணி நடித்திருந்தாலும், அவரது இறுதி ஊர்வலத்தில் ஒருசிலரே பங்கேற்றது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz