Pongal 2024 News Second Day Of Pongal Day, Mattu Pongal Is Being Celebrated In A Grand Manner Across Tamilnadu

பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது. 

மாட்டு பொங்கல்
பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. எப்படி விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துகிறோமோ அதை போல் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தன்று வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு அந்த நாள் கொண்டாடப்படும். அதேபோல்தான் மாட்டுப் பொங்கலுக்கு மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பொங்கலிடும் வைபவம் நடைபெறும்.
மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் மாட்டு தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. மாடு மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுவதாலும் அதன் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும், இந்த நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையிலேயெ மாடுகளை குளிப்பாட்டி, அதன் நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளில் வண்ணம் தீட்டி, இரு கொம்புகளையும் சுற்றி வேட்டி அல்லது துண்டுகளை பரிவட்டமாகக் கட்டி  மரியாதை அளிப்பார்கள். 
 காஞ்சிபுரத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
தைப்பொங்கல் தினம் நேற்று கொண்டாடிய நிலையில் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலை கொண்டாடும் தினமான இன்று காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உறவுக்கு தோள் கொடுத்த மாடுகளை கௌரவிக்கும் விதமாக வீட்டு வாசல்களில் விதவிதமான வண்ணங்களில் மாடுகளை கோலங்களாக போட்டு உங்களை வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.

 கடைகளில் குவிந்த விவசாய பெருங்குடி மக்கள்
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாடுகளுக்கு புதிய கயிறு மாற்றுவது அலங்காரப் பொருட்கள் மூலம் மாடுகளை அலங்காரம் செய்வது, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, மாடுகளுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது உள்ளிட்ட வகையில் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு மாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் விவசாயகள் மற்றும்  பொதுமக்கள் குவிந்து மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக துணிக்கடைகளில் கூட்டம் இருந்த நிலையில் இன்று காலை முதலே மாடு சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குவிந்து வருகிறது.
பொங்கலிட நல்ல நேரம் எது? 
பொதுவாக பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்டு வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நேரத்தில் வழிபாடு நடத்த முடியாதவர்கள் ராகுகாலம், எமகண்டம், குளிகை தவிர்த்து பிற நேரங்களை நல்ல நேரமாக கருதி பொங்கலிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மாடு இல்லாதவர்களும் இந்த நாளை கொண்டாட, உங்கள் பகுதியில் இருக்கும் மாடுகளுக்கும், கோவிலில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உணவு படைத்தும் வழிபடலாம். 

Source link