Tamilnadu Government Strict Action Against Those Who Spread False News About Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் விவகாரம்; பொய் செய்தி பரப்பியவர்கள் மீது பாயும் நடவடிக்கை

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 
அயோத்தி ராமர் கோயில்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நாளை குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் அயோத்தி கோயில் திறப்பு விழா கொண்டாட்டம் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்த மாநில அரசு தடை விதித்ததாக செய்தி வெளியானது. 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு 
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு, “தமிழ்நாடு அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்ப வதந்தி பரப்பப்படுகிறது. ராமர் கோயில் தொடர்பாக தமிழ்நாடு கோயில்களில் அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவலை உயர்ந்த பதவியில் இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது’ என கூறினார். 
ஆனால் மீண்டும் அமைச்சர் சேகர்பாபு பதிலுக்கு, கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”சேகர் பாபு அவர்களே, உங்கள் ட்வீட்டுக்கு பதில் கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறை, மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது” என தெரிவித்திருந்தார். 
தமிழ்நாடு அரசு விளக்கம் 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி. நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link