செந்தில் பாலாஜி ஊழலை சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்… எடப்பாடி பழனிசாமி உறுதி…

அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தாதாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்கள் உயர்ந்துள்ளார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் காரணம் என்றார். அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது, இதனால் தமிழகம் சிறந்த மாநிலமாக செயல்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகளை திறந்ததால் கல்வி
கற்போர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்தது. குறிப்பாக உயர்கல்வி படிப்பவர்கள எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் தான் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் ஏழைகளுக்காக நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்துவது தான் திமுகவின் சாதனை. தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் லஞ்சம் நிலையில் உச்சத்திற்கு சென்று விட்டது.

மதுக்கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம், ஒரு கோடி மதுபாட்டில்கள் வீதம் ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு பத்து கோடி என விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கிறார்கள். 24 மணி நேரம் மதுபானகடைகள் மது விற்பனை செய்யப்படுகிறது. முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வரும் பணம் தலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக ஆட்சி, அதிகாரங்களில் உள்ளவர்கள் வளம்பெற தான், 8 கோடி மக்கள் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து பயந்து, முடங்கி, நடுங்கி உள்ளார்கள். அவர் வாய் திறந்துவிட்டால், ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில்தான், அமைச்சர்கள் அவரை தேடி அனைவரும் ஓடிக்கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக தான் மக்கள் பார்த்து வருகிறார்கள். தேசியளவில் 140 விருதுகளை அதிமுக ஆட்சியில் பெறப்பட்டது. திமுக ஆட்சியில் எந்தவித விருதுகளும் பெறவில்லை, அதிகமான தேசிய விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அந்த அளவுக்கு அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டது.

அரசாங்கத்தை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சர் ஆக இருந்து வருகிறார். இந்தியாவிற்கே ஊழல் செய்வதில் வழிகாட்டியாக உள்ளது திமுக.

திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன அரசபரம்பரையா? கருணாநிதிக்கு பிறகு முக.ஸ்டாலின், அவருக்குப் பிறகு பிறகு உதயநிதி என்று சாசனமா எழுதி வைப்பதற்கு. ஏழை மக்கள் வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக நெடுஞ்சாலையில் வருவது போன்று திமுக தலைவராக பொறுப்பேற்று உள்ளார். ஒவ்வொரு நிலையாக சென்று படிப்படியாக உழைத்து பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தேன்.

மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டாலும், தமிழக முதல்வருக்கு கவலையில்லை. உதயநிதி ஸ்டாலின் வந்தாலும், இன்பநதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். எதற்கு என்றால் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். அதனால் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அந்த கூட்டத்தில் ஈபிஎஸ் பேசினார்.