இரண்டு மாணவர்களுக்கு கத்திக்குத்து! பிட் அடிக்காதே என்றதால் ஆத்திரம்!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண்ணில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றபோது நயினார்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டுச்சீட்டில் உள்ள விடைகளை பார்த்து தேர்வு எழுதியிருக்கிறார்.

இதனைக் கண்ட நிஷாந்த் , அமிர்தராஜ் ஆகிய இரு மாணவர்களும் ‘பார்த்து எழுதாதே’ ‘ஆசிரியரிடம் கூறிவிடுவோம் ‘ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்வு முடிந்து பள்ளிக்கு வெளியே வந்தபோது தான் தேர்வில் காப்பியடித்ததை கூறிவிடுவோம் என்று கூறிய இரு மாணவர்களையும் காப்பி அடித்த மாணவர் கூர்மையான கம்பியால் குத்தியதாகவும், இதில் இருவருக்கும் விலாவில் குத்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

காயம் அடைந்த இரு மாணவர்களையும் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காயங்களில் தையல் போடப்பட்டதும் இருவரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை கைது செய்த போலீசார், அந்த மாணவன் கூர்மையான ஆயதத்துடன் பள்ளிக்கு எப்படி வந்தது? என்பது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரித்து வருகின்றனர்.