ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!


<p><strong>தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. நாயகர்கள், வசன உச்சரிப்பு, வசன மொழி, உடல்மொழி, நடனம், இசை என அனைத்துமே தமிழ் சினிமா தோன்றியது முதல் இன்று வரை பல உருமாற்றங்களை அடைந்துள்ளது. அதில் பாடல் வரிகள் மட்டும் விதிவிலக்கல்ல.</strong></p>
<p>காயாத கானகத்தே என்று பாகவர் காலத்தில் தொடங்கிய பாடல்களை சாமானியர்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சென்றதன் தொடக்கப்புள்ளி பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன் என பெரிய மறைந்த ஜாம்பவான்கள் ஆவார்கள். இதில் வாலி மாடர்ன் சினிமாவிலும் பாடல் எழுதிய மாமேதை.</p>
<h2><strong>நிலா நீ வானம் காற்று:</strong></h2>
<p>இன்றைய தமிழ் சினிமாவில் வரும் பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களுக்கு புரியும்படி அமைவதில்லை. அதில் உணர்வுகளை வலியுடன் கடத்தும் வகையில் வீரியமும் இல்லாமல் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேதனையான உண்மையாக உள்ளது. இந்த சூழலில், எவர்கிரீனாக எப்போதும் மனதில் நிற்கும் பாடல்களை பற்றி இனி தொடராக நாம் காணலாம். நல்ல தமிழ் மொழி ஆளுமை கொண்ட பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.</p>
<p>90ஸ் கிட்ஸ்களின் மனதில் எப்போதும் சில கவிஞர்களுக்கு என்றும் தனி மரியாதை உண்டு. அதில், யுகபாரதிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும், அவரது பாடல் வரிக்கு மிகப்பெரிய மரியாதையும் உண்டு. அப்படி அவரது எழுத்தில் உருவான பாடல் &ldquo;நிலா நீ வானம் காற்று..&rdquo;, சேரனின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான பொக்கிஷம் படத்தில் இடம்பெற்றுள்ளது இந்த பாடல்.</p>
<h2><strong>தமிழும், காதலும்:</strong></h2>
<p>ஒரு இந்து இளைஞனுக்கும், இஸ்லாமிய இளைஞனுக்கும் இடையே கடிதங்கள் மூலம் வளர்க்கப்படும் காதலை, இருவரும் ஒருவரை ஒருவரை பார்க்காமலே தங்கள் காதலை வளர்த்துக் கொள்வதை மிக அழகாக வரிகளால் கடத்தியிருப்பார் யுக பாரதி.</p>
<p>வெறும் காதல் வார்த்தைகளை வைத்து இந்த பாடலை யுகபாரதி கடந்து செல்லாமல், இந்த காதல் பாடலில் தமிழின் பெருமையை வடித்திருப்பது தனி அழகு. நாயகி நாயகன் மேல் கொண்ட பேரன்பை தமிழையும், தமிழின் முக்கியமான நூலுடன் ஒப்பிடுவது போல எழுதியிருப்பார். அந்த வரிகளே</p>
<p><strong>அன்புள்ள தமிழே</strong></p>
<p><strong>அன்புள்ள செய்யுளே</strong></p>
<p><strong>அன்புள்ள இலக்கணமே</strong></p>
<p><strong>அன்புள்ள திருக்குறளே</strong></p>
<p><strong>அன்புள்ள நற்றிணையே</strong></p>
<p>என்று அமைந்திருக்கும். நிலா, வானம், காற்று ஆகியவையுடன் ஒப்பிட்டு கடந்து செல்லாமல் அந்த பெண்ணின் காதல் தமிழை போல உயர்வானது என்பதை உணர்த்தும் விதமாகவே, அன்புள்ள தமிழ் மொழியின் செய்யுள் வடிவத்தையும், தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர்கள் மிக உயர்ந்த நூலாக கருதப்படும் திருக்குறளையும், நற்றிணையையும் ஒப்பிட்டிருப்பார். இன்றளவும் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் மனதில் மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டும் தனித்து ஆழமாக பதிந்திருக்கும். அவர்களை முணுமுணுக்க வைக்கும்.</p>
<h2><strong>வார்த்தைகளை ஏன் இனி தேடிட:</strong></h2>
<p>இந்த வரிகள் மட்டுமின்றி இந்த இன்னொரு இடத்தில், நாயகன் தனது காதலி எனும் தேவதையை அன்னப்பறவையுடன் ஒப்பிட்டு, பட்டாம்பூச்சியாகவும் வர்ணித்து, அவளை கொஞ்சும் தமிழ் குழந்தை என்று வர்ணித்திருப்பார். அத்தனையையுமாக வர்ணித்திருப்பார்.</p>
<p>நாயகியும் தனது காதலனை மன்னா, கணவா, கள்வா, கண்ணாளா என வர்ணித்து, தமிழ் மொழியுடனும், தமிழ் நூல்களுடனும் ஒப்பிட்டு,&nbsp; திருடா, கிறுக்கா, திமிர் என செல்லமாக திட்டி இறுதியில் &ldquo;அன்பிலே நாம் சேர்ந்திட வீண் வார்த்தைகளை இனி ஏன் தேடிட&rdquo; தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் முடிந்திருக்கும். &nbsp;பொக்கிஷம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை மிக அழகாக சேரன் காட்சியாக்கியிருப்பார். நீங்கள் இந்த பாடலை மீண்டும் கேட்டால் நிச்சயம் இந்த வரிகள் மட்டும் தனித்து மனதில் ஒலிக்கும். அடுத்த தொடரில் வேறு பாடலுடன் சந்திப்போம்.</p>

Source link