தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை திடீர் சரிவு… வரைவு பட்டியலில் அதிர்ச்சி தகவல்…

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-ன்படி தமிழ்நாட்டில் தற்போது 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் – 3,00,68,610, பெண்கள் – 3,10,54,571, மூன்றாம் பாலினத்தவர் – 8,016 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாடை ஒப்பிடும்போது ஒன்பது லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார்.

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு, ஆண்கள் – 3,26,676, பெண்கள் – 3,25,279, மூன்றாம் பாலினத்தவர் – 110 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 169,030 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 164,கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இங்கு, ஆண்கள் – 83,436, பெண்கள் – 85,591, மூன்றாம் பாலினத்தவர் – 0 என தெரிவிக்கப்பட்டுள்ளது

04:11.2023, 05:112023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தம் / இடமாற்றம் / ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த பகுதிகளில் செயல்படும் முகாம்களில் கிடைக்கும் என்றும், அவற்றை பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024ன் போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 27.10.2023 முதல் 09.122023 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் / திருத்தங்கள் / இடமாற்றம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.