PVR vs Malayalam Cinema : மலையாள சினிமாக்களை தூக்கிய காரணம் என்ன? பிவிஆர் கேரள தயாரிப்பாளர் சங்கம் மோதல் பின்னணி


<p><strong>ஏற்கனவே வெளியான ஆடு ஜீவிதம் படம் நீக்கப்பட்டத்துடன் சமீபத்தில் வெளியான மூன்று மலையாளப் படங்களையும் திரையிட மறுத்துள்ளது பிவிஆர் நிறுவனம்.</strong></p>
<h2>பிவிஆர் vs மலையாள சினிமா</h2>
<p>மல்டிப்ளக்ஸின் வருகைக்குப் பிறகு பெரும்பாலான திரையரங்குகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்துள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பிவிஆர் நிறுவனம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய ஒரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை.&nbsp; டிஸ்ட்ரிபியூட்டர்களைப் போல் ஒரு படத்திற்கான வெளியீட்டு உரிமத்தை நேரடியாக வாங்கி அவற்றை வெளிடவும் செய்கின்றன. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடுவதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.</p>
<p>திரையரங்குகளில்&nbsp; படங்கள் ப்ரோஜெக்டர்களின் வாயிலாக திரையிடப்படுகின்றன என்பது நமக்கு தெரிந்த தகவல். தொழில்நுட்பம் மற்றும்&nbsp; தரத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் வெவ்வேறு வகையான ப்ரோஜெக்டர்கள் திரையரங்குகளுடன் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.</p>
<p>இந்தியாவைப் பொறுத்தவரை&nbsp; QUBE , UFO , TSR , PXD போன்ற ப்ரோஜக்டர் ரகங்களை முதன்மையாக சொல்லலாம். இந்த ப்ரோஜெக்டர்களில் திரையிடுவதற்கு ஏற்ற வடிவத்தில் படங்களை திரையிட மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் VPF எனப்படும் Virtual Print Fee என்கிற கட்டண முறையின் வழி&nbsp; கனிசமான ஒரு தொகையை பெற்று வருகிறார்கள்.</p>
<p>இந்த தொகை ரொம்ப அதிகம் என்று கருதும் தயாரிப்பாளர் பல வருடங்களாக மல்டிப்ளக்ஸ் நிறுவனங்களுடன் முறையிட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த சமரசும் ஏற்படவில்லை.</p>
<h2>கேரள மாநிலம் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் சினிமா கவுன்சில்</h2>
<p>கேரள மாநிலம் திரைப்படத் துறையை முடிந்த அளவிற்கு&nbsp; திரைப்படத் துறையை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சின்ன <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> படங்களை ஆதரிக்கவும் ,&nbsp; போலியான விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க பல முன்னோடியான முயற்சிகளை அரசின் ஒப்புதலுடன் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளம் ஒன்று கேரளாவில்&nbsp; தொடங்கி வைக்கப்பட்டது.&nbsp;</p>
<h2>மலையாளப் படங்களை நீக்கிய பிவிஆர்</h2>
<p>அந்த வகையில் கலை மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து டிஜிட்டல் சினிமா கெளன்சில் என்கிற தனிப்பிரிவை தொடங்கியுள்ளது கேரளத் திரைப்படத் துறை.திரைப்பர தயாரிப்புகளில் உருவாகும் செலவுகளை குறைப்பதே இந்த பிரிவின் முதன்மையான நோக்கம். மல்டிப்ளக்ஸ் நிறுவனங்களுக்கு கொடுக்கும் VPF கட்டண முறைக்கு பதிலாக PDC எனப்படும் Producers Digital Cinema என்கிற முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்த டிஜிட்டல் சினிமா கவுன்சில்.</p>
<p>மல்டிப்ளக்ஸ் நிறுவனங்களுக்கு கொடுப்பதைவிட பலவிதமான வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் படங்களை திரையிடுவதற்கான ப்ரொஜெக்டர் வடிவத்தை இந்த அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இனிமேல் மலையாளத் திரைப்படங்கள் PDC வடிவில் திரையிடப்பட வேண்டும் என்று மல்டிப்ளக்ஸ் நிறுவனங்களை வலியுறுத்தியது கேரள திரைப்பட சங்கம். இதனை மறுத்த பிவிஆர் நிறுவனம் மலையாளப் படங்களை அதன் திரையரங்குகளில் திரையிட மறுத்துவிட்டது. சமீபத்தில் வெளியான மஞ்ஞும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையிலும் அவற்றை திரையிட மறுத்துவிட்டது பிவிஆர். மேலும்&nbsp; பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதை நீக்கியுள்ளது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் சமீபத்தில் வெளியான ஆவேஷம் , வருஷங்களுக்கு சேஷம் , ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்களை பிவிஆர் வெளியிடவில்லை.&nbsp; தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பிவிஆர் திரையரங்குகளின் முன் நஷ்ட ஈடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.</p>
<p>இதுதொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி உன்னிகிருஷ்ணன் " இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் பேசியுள்ளோம். பிவிஆர் நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இனிமேல் VPF அடிப்படையில் திரைப்படங்கள் திரையிடப்படாது. மேலும் இந்த பிரச்சனையில் தீர்வு காணாதவரை&nbsp; &nbsp; மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்ட பிற மொழிப் படங்களும்&nbsp; பிவிஆர் திரையரங்குகளில் திரையிடப்படாது"&nbsp; என்று கூறியுள்ளார்.</p>

Source link