விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?


<p>அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.</p>
<p>இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p>
<h2><strong>அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்றால் என்ன?</strong></h2>
<p>இப்படியிருக்க, கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.</p>
<p>அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் விதிக்கும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அப்படி வெற்றிபெற்றால், அதற்கு சில தனிச்சலுகைகள் தரப்படும். கட்சி சின்னம் கிடைப்பது தொடங்கி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது வரை பல சலுகைகள் கிடைக்கும்.</p>
<h2><strong>அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாவது எப்படி?</strong></h2>
<p>மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது அம்மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.</p>
<p>கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற்றதில்லை.</p>
<p>கடந்த 2016ஆம் ஆண்டு, 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் பெரிய பிரச்னை எழுந்துள்ளது.</p>
<h2>நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறிய கர்நாடக கட்சி:</h2>
<p>நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p>
<p>எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறையீட நாம் தமிழர் கட்சி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் உடன்படாத பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.</p>
<p>&nbsp;</p>

Source link