Villupuram crime rowdy showed knife and extorted money from the hotel owner – TNN | Crime: விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி

விழுப்புரத்தில் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி பணத்தை பறித்து சென்ற ரவுடியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரவுடிகளின் தொடரும் அட்டகாசத்தால் வணிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
 
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுதாகர் நகரில் சண்முகா தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியை தமிழரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ரவுடிகளான ராஜசேகர், அவனது தம்பி வல்லரசு ஆகியோர் அடிக்கடி சண்முகா தங்கும் விடுதிக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதேப்போல் நேற்று முன்தினம் இரவு சண்முகா தங்கும் விடுதிக்கு சென்ற ரவுடி ராஜசேகர், அங்கிருந்த உரிமையாளர் தமிழரசனிடம் மாமூல் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளான்.
 
அப்போது தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த ரவுடி ராஜசேகர், கத்தியை காட்டி மிரட்டியதோடு தங்கும் விடுதி உரிமையாளர் தமிழரசனின் கன்னத்தில் பளார், பளார் என பலமுறை அறைந்தான். இதனால் அச்சமடைந்த தமிழரசன் தன்னிடம் இருந்து ரூ.1,500 எடுத்து கொடுக்கவே அதனை வாங்கி கொண்டு தினந்தோறும் வருவேன். எனக்கு 500 ரூபாய் மாமூலை தர வேண்டும் என்றும் இல்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்து விட்டு ரவுடி ராஜசேகர் அங்கிருந்து சென்றுள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஆண்டு இதேப் போல் விழுப்புரம் எம்.ஜி ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் தர மறுத்த கடையின் மேலாளர் இப்ராகிம் என்பவரை ரவுடிகளான ராஜசேகர், வல்லரசு ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரவுடி சகோதரர்களின் அட்டகாசத்தால் விழுப்புரத்தில் உள்ள வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல் விடுத்தும், தாக்குதல் நடத்தியும் வணிகர்களை அச்சுறுத்தி மாமூல் வசூலில் ஈடுபட்டு வரும் இது போன்ற ரவுடிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண

Source link