<p>காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
<p>மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், &ldquo;என் மதத்தின் மீது சூளுரைத்து சொல்கிறேன். என் மதத்திற்காக உயிர் துறக்கவும் தயார். அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என அடையாளப்படுத்திக் கொண்டாலும், அனைத்து மதத்தினர் உணர்வுக்கு மரியாதை கொடுத்தவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவர் என்றவர் காந்தியடிகள்.&nbsp;</p>
<p>ஒற்றை மதவாத தேசியவாதத்தை காந்தி ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுப்படுத்துவது தொடர்கதை. காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் வன்மம் கலந்த நோக்கத்துடன் தான்.&nbsp;</p>
<p>தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியடிகளை பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுப்படுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக கருதப்படும் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகம் உள்ளது. எனவே 30 ஆம் தேதி மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports