ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 3-வது முறையாக அதிகரிப்பு

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயரம் மூன்றாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த வாரம் 2வது சுற்று பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே இன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3வது முறையாக உயர்த்தப்பட்டது என்றும் விண்கலம் 296கிமீ×71767கிமீ சுற்றுப்பாதையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

மொரிஷியல், பெங்களூரு, மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளை கண்காணித்தனர். மேலும் வருகின்ற 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு சுற்றுப் பாதை அதிகரிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.