Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு


<p>நீதிபதிகள் நியமனம் தொடங்கி ஆளுநர் விவகாரம் வரை மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றமும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய அரசும் குற்றஞ்சாட்டி வந்தன.</p>
<h2><strong>தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சர்ச்சை:</strong></h2>
<p>இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p>
<p>இப்படிப்பட்ட சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p>
<p>ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.</p>
<h2><strong>உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு:</strong></h2>
<p>இச்சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்தார். இந்திய தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அமைச்சரை நியமித்திருப்பதன் மூலம் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், 2023, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்துள்ளது என மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p>
<p>இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை வதிக்க மறுத்துவிட்டது. "சட்டத்துக்கு எப்படி தடை விதிக்க முடியும்" என சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.</p>
<p>இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.</p>
<p>&nbsp;</p>

Source link