CM Stalin: சமூகத்தின் சரிபாதி பெண்கள்! மகளிர் உரிமையை முழுமையாக பெறும் வரை பயணிப்போம் – முதலமைச்சர் மகளிர் தின வாழ்த்து


<h2>மகளிர் தினம்:</h2>
<p>சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள்.</p>
<p>பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.</p>
<h2>முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:</h2>
<p>மகளிர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &rdquo;மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.திராவிட இயக்கத்தின் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
<p>அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன். சுயமரியாதைத் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் சட்டத்தை அவர் நிறைவேற்றினார். பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.</p>
<h2><strong>மகளிர் திட்டங்கள்:</strong></h2>
<p>அதுமட்டுமின்றி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மகளிர் மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், கைம்பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் முதியோர் உதவித் தொகை, 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம், பெண்களே நடத்தும் நியாய விலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாட்டில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல் முறையாக 1973- காவல்துறையில் மகளிர் நியமனம் என்று கலைஞரின் ஆட்சிக் காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.</p>
<p>50 விழுக்காட்டுக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர் என்பது இதுவரை இல்லாத சாதனை ஆகும். இத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"-ஐ வெளியிட்டோம்.</p>
<p>பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை என்ற முழுமையான புரிதலுடன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், நமது திராவிட மாடல் அரசு பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்&rdquo; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>

Source link