கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட கட்சியின் தலைவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை, நாடு முழுவதும் இருப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், அப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.

பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது  என்றும், இத்தகைய கருத்துகளை தெரிவிப்பதை அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.