மக்களவை தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:
மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர், நாளை ஆலோசனை செய்ய உள்ளார். தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசிக்க உள்ளார். 
மக்களவை தேர்தல் எப்போது?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. அதற்காக, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.
ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த அரசியலைப்பில் திருத்தம் மேற்கொள்வது, அரசியல் கட்சிகளின் ஒப்புதலை பெறுவது என பல சிக்கல்கள் உள்ளன. எனவே, வரும் 2024ஆம் ஆண்டு, இதை அமல்படுத்துவது கடினம் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்களவை தேர்தலுடன் பதவிக்காலம் நிறைவு பெறும் சட்டப்பேரவைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி என்ன:
கடந்த 1950ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணைம் அமைக்கப்பட்டதில் இருந்து 1989ஆம் ஆண்டு வரை, இது ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாகவே இருந்தது. ஆனால், 1989ஆம் ஆண்டுக்கு பிறகு, மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.
இருப்பினும், நடுவில் மீண்டும் ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பிரதமரின் பரிந்துரையில் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இச்சூழலில், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், 2023, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, “பிரதமர், எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசு தலைவர்  நியமிப்பார். இந்த கமிட்டிக்கு பிரதமர் தலைமை தாங்குவார்”
 

Source link