"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!


<p><strong>இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</strong></p>
<h2>சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:</h2>
<p>கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு கைதுகளும் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.</p>
<p>தமிழ்நாடு <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a>, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ளனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.</p>
<h2><strong>அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்:</strong></h2>
<p>கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த வழக்கிலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p>
<p>இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "கெஜ்ரிவால் கைதை&nbsp;கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான, காலதாமதம் இல்லாத வகையில் வழக்கு நடத்தப்படும் என்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.</p>
<p>கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தற்காலிக தலைமை துணை தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.</p>
<p>இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு அரசுகள் மரியாதை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சக ஜனநாயக நாடுகளின் விவகாரத்தில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.</p>
<p>இல்லையெனில் அது ஆரோக்கியமற்ற முன்னுதாரணங்களுக்கு வழிவகுக்கும். இந்தியாவின் சட்ட நடைமுறைகள், சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை. எந்த வித பாரபட்சமும் இன்றி,&nbsp;சரியான நேரத்தில் முடிவுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதை விமர்சிப்பது தேவையற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>

Source link