China India trade barbs over Arunachal Pradesh External affairs minister Jaishankar term china claims ludicrous


Arunachal: இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. 
இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பதற்றம்:
வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே அருணாச்சல பிரதேச்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. 
திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு அங்கமே அருணாச்சல பிரதேசம் என கூறி வருகிறது. கடந்த 1962ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. பின்னர், கடும் அழுத்தத்தை தொடர்ந்து,  சீனா, அங்கிருந்து படைகளை திரும்பப் பெற்று கொண்டது.
இதற்கிடையே, சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய – சீன – பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விஸ்வரூபம் எடுத்த அருணாச்சல் விவகாரம்:
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில், இருதரப்பில் பலி எண்ணிக்கை பதிவானது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அருணாச்சல விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம், தங்களின் எல்லைப்பகுதி எனக் கூறி, சீனா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், இதுகுறித்து குறிப்பிடுகையில், “இந்திய, சீன நாடுகளுக்கு இடையேயான எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
ஜாங்னனில் (அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா வைத்துள்ள அதிகாரப்பூர்வ பெயர்) இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பு அது எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அந்த பிராந்தியம் முழுவதுமே சீனா சிறப்பாக நிர்வாகம் செய்து வந்துள்ளது.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்தான் அருணாச்சல பிரதேசத்தை  இந்தியா நிறுவியுள்ளது. இது, மறுக்க முடியாத உண்மை” என்றார். இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
முட்டாள்தனமான கருத்தை சீனா தெரிவித்திருப்பதாக கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது புதிய பிரச்னை அல்ல. சீனா ஏற்கனவே சொந்தம் கொண்டாடியுள்ளது. இது, முட்டாள்தனமானது” என்றார்.
கடந்த ஒரே மாதத்தில், அருணாச்சல பிரதேசம் விவகாரத்தை சீனா 4 முறை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link