Lok Sabha Election 2024 PM Modi may come to Perambalur for Parivendar BJP chief Annamalai campaign | Lok Sabha Election 2024: பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூருக்கு வரக்கூடும்


மோடியை தமிழகத்திற்கு  முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்தான் என,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் அண்ணாமலை பரப்புரை:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள,  இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய  அண்ணாமலை, ”2013 ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர் என புகழாரம் சூட்டினார்.
திமுகவை சாடிய அண்ணாமலை:
திமுகவில் அப்பா நேரு மந்திரி! பிள்ளை அருணுக்கு பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு சீட்! ஒரு குடும்பத்திற்கு எத்தனை பதவி தான் கொடுப்பாங்க? திமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இருபதைக் கூட நிறைவேற்றவில்லை இந்த இரண்டரை ஆண்டுகளில் என சரமாரியாக குற்றம் சாட்டினார். மேலும் பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் எம். பி கதிர் ஆனந்த் கூறுகிறார் திமுக ஆட்சியில் பெண்கள் மினுக் மினுக் என இருக்கிறார்களாம். திமுக மகளிர் உதவித் தொகையில் அழகு கிரீம் தடவிக் கொண்டிருக்கிறார்களாம். இப்படியா தாய்க் குலத்தை கேவலப்படுத்துவது? பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா எனக் கூறிய அண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிக்கான ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றி பெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் பிரதமர் மோடி பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர இருக்கிறார் என்றும் பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என்றும் அண்ணாமலை பெருமிதம் பொங்க கூறினார்
பாரிவேந்தருக்காக பிரதமர் பெரம்பலூர் வரக்கூடும்-அண்ணாமலை
தொடர்ந்து, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது, ”பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரயில் திட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.  நேர்மையால் உண்மையால் மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர்.  அவர் சம்பாதித்த பணத்தை தொகுதிமக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது. இம்முறை பாரிவேந்தர் வெற்றிபெற்றால் 1500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.. மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பாரிவேந்தர், அவருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.
தாமரை சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக,  ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக்கொடுத்து வேலைபார்க்கவேண்டும். பெண்களை அவமானப்படுத்தும் திமுகவின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம். உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச்செய்வது நமது கடமை” என்று  அண்ணாமலை பேசினார்.

மேலும் காண

Source link