"பிரதமர் மோடி மீது வன்மம்! கடவுளை எதிர்க்கும் காங்கிரஸ்" – கொந்தளித்த பா.ஜ.க.


<p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களை சேர்ந்த 25,000 இந்து மதத்தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.</p>
<h2><strong>காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு:</strong></h2>
<p>மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.</p>
<p>ஆனால், அயோத்தி கோயில் விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. நீண்ட காலமாக அரசியலாக்கி வருவதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ், ஆர்எஸ்எஸ்/பாஜக விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சிக்கு வன்மம் இருப்பதாகவும் அக்கட்சி கடவுளை எதிர்ப்பதாகவும் சாடியுள்ளது.</p>
<p>செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்சு திரிவேதி, "ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் வர மறுத்திருப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தின் மீதான காங்கிரஸ் கட்சியின் உள்ளார்ந்த எதிர்ப்பு அம்பலமாகியுள்ளது.</p>
<h2><strong>"காங்கிரஸ் கட்சியின் தீவிரவாத அரசியல்"</strong></h2>
<p>பிரதமர் நரேந்திர மோடி மீது பொறாமை கொண்டு, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகளால், நாட்டையே எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி சென்றுள்ளது. தற்போது கடவுளை எதிர்க்கிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மிக உயர்ந்த விழுமியங்களை குறிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும் இதே மனநிலை கொண்ட மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் தீவிரவாத அரசியல்தான் முக்கியம்.</p>
<p>கோயில் மற்றும் பாபர் மசூதி சம்பந்தப்பட்ட நிலப்பிரச்சனை வழக்கில் வாதாடிய முஸ்லீம் வழக்கறிஞர் இக்பால் அன்சாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், விழாவைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பது காங்கிரஸ்தான். நாட்டிற்கான வரலாற்று தருணங்களில் தடையை உருவாக்குவது முக்கிய எதிர்க்கட்சியின் (காங்கிரஸ்) போக்காக உள்ளது. வரலாற்றின் பக்கம் திரும்பும் போதெல்லாம், உடன் நிற்பதற்குப் பதிலாக காங்கிரஸ் புறக்கணித்தே வந்துள்ளது" என்றார்.</p>
<p>புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, ஜிஎஸ்டி அமலாக்கம், ராம்நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முர்மு ஆகியோர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை ஆற்றியது போன்ற விவகாரங்களை குறிப்பிட்டு பாஜக செய்தித்தொடர்பாளர் விமர்சித்தார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், "மக்களும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், அது இன்னும் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ளவில்லை. கட்சி தனது கடந்த கால தவறுகளை திருத்தி கொள் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது அந்த வாய்ப்பை வீணடித்து விட்டது" என்றார்.</p>
<p>&nbsp;</p>

Source link