<p>PM Modi Visit : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். </p>
<h2>பயணத்திட்டம்:</h2>
<p>நாளை மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயண்ம் மேற்கொள்கிறார். பின் மாலை 5.50 மணியளவில் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023 ஐ துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார்.</p>
<p>2ஆம் நாள் பயணமாக 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி சென்றடைந்ததும் சாலை மார்கமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படுகிரார். மதியம் 2.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருக்கு ராமநாத சுவாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார்.</p>
<p>3ஆம் நாள் பயணமாக ராமகிருஷ்ண மடத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு அரிச்சல் முனைக்கு செல்கிறார். அங்கு தரிசனம் செய்த பின் 10.30 மணிக்கு கோதண்ட சாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் செய்த பின் 11.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். 12.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல்கிறார்.</p>
<h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்:</h2>
<p>பிரதமர் மோடி வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத பிரதமர் 19.1.2024 அன்று, சென்னை, பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023ஐ துவக்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை தந்து. 20.1.2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ளார்.</p>
<p>1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-ன் கீழ், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராப்ட். பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 01.01.2024 முதல் 29.2.2024 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p>
<p>பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ் அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பாரத பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் (DRONE CAMERA) மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட 19.1.2024 மற்றும் 20.1.2024 ஆகிய இரு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>