Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா


இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பணிகளை முன்கூட்டியே கட்சிகள் தொடங்கிவிட்டன. திமுக-வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு என மூன்று குழுக்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதயநிதி இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு    
திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி பொறுப்பாளர்களையும் திமுக நிர்வாகிகளையும் சந்தித்து கடந்த ஜனவரி 28அம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியது.
திமுக மூத்த நிர்வாகிகளாக உள்ள கேன்.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோனோர் கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை இந்த முறை திமுகவிற்கே ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி எம்.பிக்களுக்கு சீட் தர எதிர்ப்பு
குறிப்பாக, கரூர், விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் தற்போதைய காங்கிரஸ் எம்.பிக்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், இந்த முறை இந்த தொகுதிகளை திமுகவிற்கு ஒதுக்கி தர வேண்டும் என்றும் அப்படி முடியாதபட்சத்தில் வேறு வேட்பாளர்களை நிறுத்த சொல்லி காங்கிரஸ்க்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதே மாதிரி, மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, கொ.ம.தே.க-வை சேர்ந்த நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோருக்கு இந்த முறை நிச்சயம் சீட் கொடுக்கவே கூடாது என்று அந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் உதயநிதியிடம் நேரடியாக முறையிட்டுள்ளனர். குறிப்பாக, நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஆளுங்கட்சியான திமுகவை பலமுறை விமர்சித்து பேசியுள்ளார் என்றும் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தொகுதி பக்கமே வருவதில்லை என்பதால் மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளார்கள் என்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
’முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவே இறுதியானது’
நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களிடம் குறைகளை கேட்டுள்ள உதயநிதியை உறுப்பினராக கொண்ட குழு, திமுகவினர் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து முதல்வர் இதற்கான ஒரு முடிவை எடுத்து விரைவில் அறிவிப்பார் என்றும் யாரும் மனம் தளர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி
திமுக வேட்பாளர்கள் யார் யார் ?
இந்நிலையில், கூட்டணி கட்சிகளை தவிர்த்து திமுக சார்பில் களமிறங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் உத்தேச பட்டியலையும் திமுக நிர்வாகிகள் குழு தயார் செய்துள்ளது. நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து வந்ததும் அந்த உத்தேச பட்டியலை அவரிடம் சமர்பிக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் யார் யார் வேட்பாளர்கள் ?
நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறனே களம் இறங்குகிறார், தென் சென்னைக்கு தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு பதில் புதிய வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை கமல் திமுக கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் அவருக்கு தென்சென்னை அல்லது கோவை தொகுதியை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட சென்னை தொகுதியிலும் தற்போதைய எம்.பியான கலாநிதி வீராசாமியே போட்டியிட வாய்ப்புள்ளது.
ஸ்ரீபெரம்பதூரில் மீண்டும் டி.ஆர்.பாலு போட்டி ?
திமுகவின் பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு கடந்த முறை நின்று வெற்றி பெற்ற ஸ்ரீபெரம்பதூர் தொகுதியிலேயே இந்த முறையும் நிற்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையை பொறுத்தவரை அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன், துணை சபாநாயகர் பிச்சாண்டியின் சகோதரர் SKP கருணா ஆகியோர் பெயர் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. ஆனால், சிட்டிங் எம்.பியான சி.என்.அண்ணாதுரைக்கே மீண்டும் வாய்ப்பளிக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வேலூரிலும் காள்ளக்குறிச்சியிலும் மாற்றமில்லை?
வேலூர் தொகுதியில் சிட்டிங் எம்.பியும் திமுக பொதுச்செயலாளர் மகனுமான கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மகனான தற்போதைய எம்.பி. கவுதம சிகாமணி ஆகிய இருவரே மீண்டும் களமிறக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
அரக்கோணத்தில் ஜெகத் ; காஞ்சிபுரத்தில் செல்வம்
ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை அவர் தொகுதியான அரக்கோணத்திலேயே மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை காட்டிலும் தன்னுடைய சொந்த செலவில் பல்வேறு பணிகளை அவர் மக்களுக்கு செய்து கொடுத்திருப்பதால் இந்த முறையும் அரக்கோணம் தொகுதி அவருக்கே கொடுக்கப்படவிருக்கிறது.
காஞ்சிபுரம் தனித் தொகுதி என்பதால் மீண்டும் திமுகவை சேர்ந்த ஜி.செல்வத்திற்கே வாய்ப்பு கொடுக்கப்படவிருக்கிறது. இந்த தொகுதியை மதிமுக இந்த முறை கேட்டு, அவர்களுக்கே ஒதுக்கப்பட்டால் மல்லை சத்யா போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் என்பதால் அதனை கூட்டணி கட்சிக்கு திமுக ஒதுக்க முன்வராது என கூறப்படுகிறது. இப்போது வரை ஜி.செல்வமே மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் செந்தில்குமாருக்கு எதிர்ப்பு ? தருமபுரிக்கு புது வேட்பாளரா ?
தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்தவரனான டி.என்.வடிவேலு கவுண்டர் குடும்பத்தை சேர்தவரான டாக்டர் செந்தில்குமார் செயல்பாடுகளால் திமுக தலைமை அதிருப்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தருமபுரியில் அவரது குடும்பத்திற்கு இருக்கும் செல்வாக்கு, யார் உதவி கேட்டாலும் சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் பாங்கு என செந்தில்குமாருக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதால் இந்த முறை அங்கு வேட்பாளர் மாற்றப்படுவரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
அதோடு, கடந்த தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியையே எதிர்த்து வெற்றி பெற்றவர் செந்தில் என்பதால் அவருக்கான மசுவு குறையாமல் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது.
தஞ்சையில் மீண்டும் எஸ்.எஸ்.பி
தஞ்சை தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம்.பியாக இருக்கும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கே மீண்டும் சீட் கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரை பொறுத்தவரை திமுகவிற்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அதே நேரத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை நாடாளுமன்ற மக்களுக்கு மிகவும் பரிட்சயப்பட்டவர், தெரிந்த முகம், அறிந்த பெயர் என்பதால் அவருக்கே இந்த முறையும் சீட் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் வயது முதிர்வு காரணமாக அவருக்கு பதில் வேறு ஒருவருக்கு சீட் தரலாம் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, கடவுள் பெயரை கொண்ட ஒரு தொழிலதிபரின் பெயரும் தஞ்சை வேட்பாளர் பட்டியலில் அடிப்பட்டு வருகிறது.
திருச்சி அருணுக்கா ? இல்லை துரை வையாபுரிக்கா ?
திருச்சி தொகுதி கடந்த முறை காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டு அங்கு மூத்த தலைவர் திருநாவுக்கரசர் நின்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறை திருச்சியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  திருச்சியில் அமைச்சர் கே.என்.மகன் அருணை நிற்க வைக்க ஒரு பக்கம் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மதிமுகவும் திருச்சியை குறித்து வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. மதிமுவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டால் வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வையாபுரி இங்கு நிற்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை திருச்சி தொகுதியை திமுக மதிமுகவுக்கு தராவிட்டால், விருதுநகர் தொகுதியில் நிற்கவும் துரை வையாபுரி தயாராகி வருகிறார். அதே நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு மகனுக்கு திருச்சி தொகுதி வழங்கப்படாத பட்சத்தில் பெரம்பலூர் தொகுதியில் அவரை போட்டியிட வைக்கவும் நேரு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராசா நீலகிரியில் போட்டியா ? பெரம்பலூரில் போட்டியா ?
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி சிட்டிங் எம்.பியுமான ஆ.ராசா இந்த முறை பொதுத் தொகுதியான பெரம்பாலூர் தொகுதியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் களமிறக்கப்படுவதால் அவருக்கு வலுவான போட்டியாளராக ஆ.ராசாவே இருப்பார் என்பதால் அவரை அங்கேயே போட்டியிட வைக்க திமுக நிர்வாகிகள் முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.
மற்ற தொகுதிகளில் வேட்பாளர் நிலவரம் என்ன ?
தென்காசி, நெல்லை, சேலம், பொள்ளாச்சி, கடலூர், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில்  புதிய வேட்பாளர்களை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பின்னர் 12ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் திமுக போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர்களும் இறுதி செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link