பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? தீயாய் பரவும் பொய் செய்தி!


பாகிஸ்தானில் ஹனுமான் கோயில் ஒன்று பொது கழிவறையாக மாற்றப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா?
பாகிஸ்தான் லாகூர் நகரத்தில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க பசுலி ஹனுமான் கோயில். இந்த கோயிலுக்கு பசுலி மந்திர் என்ற பெயரும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பணக்கார இந்து குடும்பத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளமாக விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக இந்த கோயில் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் 1947 இல் பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகான காலத்தில் இந்த கோயிலை சிலர் குறிவைத்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருவதாகவும் செய்திகள் உலா வருகிறது. 
அதோடு நின்றுவிடாமல், சிதிலம் அடைந்த இந்த கோயிலை பொது கழிவறையாக மாற்றிவிட்டனர் என செய்திகள் உலா வருகிறது. ஆனால், இது பொய்யான செய்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 
இந்திய – பாகிஸ்தான் உறவு:
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, 2008 மும்பை தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு உறவில் உச்சக்கட்ட விரிசலை ஏற்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் பிரச்னையை மேலும் பெருதாக்கியது.
இயல்பான பேச்சுவார்த்தை கூட தடைப்பட்டது. இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி தொடர்களில் கூட இந்திய அணி விளையாட மறுத்து வருகிறது.
இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், பாகிஸ்தானில் இந்து கோயிலை அவமதித்துள்ளனர் என வெளியாகியுள்ள பொய் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இம்மாதிரியான செய்திகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இம்மாதிரியான பொய் செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயத்தில், இம்மாதிரியான பொய் செய்திகளை களைவதில் சுதந்திரமான ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதையும் படிக்க: Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல் – ஈரானிடம் காஷ்மீர் பிரச்னையை முன்வைத்த பாகிஸ்தான்

மேலும் காண

Source link