<p>புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி உள்ளனர்.</p>
<p>இதுகுறித்து அவர்கள் கூறி உள்ளதாவது:</p>
<p><strong>நிலைகுலைந்து விட்டேன்: ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்</strong></p>
<p>’’புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட செய்தி அறிந்து நிலைகுலைந்து விட்டேன். இதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.</p>
<p>இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை எல்லாம் பார்க்க மாட்டேன். அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பேன். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுப்பேன். போதைப் பொருள் புழக்கத்தைக் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன்’’.</p>
<p><strong>பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை: அன்புமணி</strong></p>
<p>’’புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில் 9 வயதுச் சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மகளிர் நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.<br /><br />சிறுமியை சீரழித்தவர்கள் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள்தான். சிறுமி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் இரு நாட்களுக்கு முன்பாகவே புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்த உடனே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை பத்திரமாக மீட்டிருக்க முடியும். ஆனால், சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் அச்சிறுமி சிதைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம். அந்த வகையில் இந்தக் கொடுமைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.</p>
<p><strong>தலைவிரித்தாடும் கஞ்சா பயன்பாடு </strong></p>
<p>புதுவை மாநிலம் முழுவதும் கஞ்சா பயன்பாடு தலைவிரித்தாடுகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. புதுவையில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கும் கஞ்சாதான் முதன்மைக் காரணமாக உள்ளது. கஞ்சா நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய வகையிலும் இந்தக் குற்றத்திற்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.<br /><br />9 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கும் சட்டப்படி தூக்குத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை பெற்றுத்தர புதுவை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றத்தைத் தடுக்கத் தவறிய முத்தியால்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’’.</p>
<p><strong>எங்கே போகிறோம்?- <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> கேள்வி</strong></p>
<p>’’புதுச்சேரியில் 9 வயதுச் சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான்.</p>
<p>குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்.</p>
<p><strong>போதை வஸ்துகளே காரணம்</strong></p>
<p>மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்.</p>
<p>இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்’’.</p>
<p>இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports





















Great content! Keep up the good work!