பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், மறைந்த பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1924ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி, பிகார் மாநிலத்தில் பிறந்தவர் கர்பூரி தாக்கூர். இவர், மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக மக்கள் தலைவர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.
பிகார் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1971 ஆண்டு ஜூன் மாதம் வரை, சோசலிஸ்ட்/பாரதிய கிராந்தி தளம் ஆட்சியில் முதல்முறை முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1979 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜனதா ஆட்சியின் கீழ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்.
பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிடவுஞ்சியா (இப்போது கர்பூரி கிராம்) கிராமத்தில் நை சமூகத்தில் பிறந்த கர்பூரி தாகூர், தனது மாணவப் பருவத்தில் சுதந்திர போராட்ட உணர்வினால் ஈர்க்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 26 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியராகப் பணியாற்றினார்.

Source link