<p>வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று &rdquo;ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர்&nbsp; ஸ்டாலின் உரையாற்றினார்.</p>
<h2><strong>&rdquo;கடல் கடந்து வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி"</strong></h2>
<p>அதன்படி, "தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால் பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.</p>
<p>நீங்கள் பிறந்தங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அயல்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும் உதவி புரிய வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்" என்றார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், &rdquo;ஆனால் சில நாட்ளுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம்.</p>
<h2><strong>&rdquo;ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் பெருமைப்படுகிறேன்&rdquo;</strong></h2>
<p>அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்.</p>
<p>உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி. அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல: இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான்.</p>
<p>பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.</p>
<hr />
<p>மேலும் படிக்க</p>
<p class="abp-article-title"><a title="Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!" href="https://tamil.abplive.com/news/chennai/kilambakkam-police-station-address-project-value-and-full-details-tnn-165697" target="_self">Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!</a></p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports