Cuddalore news Volunteer killed by snake bite near Nellikuppam – TNN | பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு


தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முற்பட்டபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் உமர் அலி (36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து  பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில், கனகராஜ் என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்ததாக வந்த தகவலை தொடர்ந்து உமர் அலி அங்கு சென்றார். ஆனால் அவர் செல்வதற்கு முன்னதாகவே தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்ததால் பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அந்த வீட்டில் பிடித்து விட்டனர். பாம்பினை பிடித்து விட்டு அவர்கள் வெளியில் வரும் நேரம் உமர் அலி அங்கு சென்றார். பாம்பை கொடுங்கள் நான் காப்பு காட்டில் விட்டுவிடுகிறேன் என உமர் அலி கூறியதால் தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அவரிடம் கொடுத்தார்கள். 

 
தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு உமர் அலி மாற்ற முயன்றபோது அந்த பாம்பு திடீரென அவரை கடித்தது. விஷம் உள்ள நல்லப்பாம்பு என்பதால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உமர்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் கடலூரில் பாம்பு பிடி வீரராக செயல்பட்டு வந்த பூனம் சந்த் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தன்னார்வலர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் தன்னார்வலர்கள் பாம்பு மற்றும் கொடிய விஷம் உள்ளவைகளை பிடிக்க கூடாது தீயணைப்புத்துறை வனத்துறை அலுவலர்கள் மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்பது பொது மக்களிடையே கோரிக்கையாக உள்ளது.
 
மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தன்னார்வலர் உமர் அலியின் உயிரிழப்புக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் காண

Source link