<p>ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p>
<p>தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது. மேலும் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்கொலைகள் தொடர்வதால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</p>
<p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:</p>
<p>’’கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p><strong>ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான ஐந்தாவது உயிர்</strong><br /><br />ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஐந்தாவது உயிர் ஜெயராமன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.<br /><br />ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவதுதான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.</p>
<p>இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/