நடிகை திரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்றும், அவரது படத்தை மாநகராட்சி அலுவகத்தில் வைத்தே ஆக வேண்டும் என்றும் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ முதல்வர் படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மஞ்சள் பின்னணி கொண்ட முதல்வர் விஜய்யின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றில், தவெகவுக்கு உறுப்பினர்கள் இல்லை என்ற நிலையில், அதிமுக, திமுக வசமே அவை உள்ளன. இதனால், அங்கு, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படமே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் படத்தை அங்கு வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா படங்களையும் வைக்க வேண்டும் என்று திமுக, அதிமுகவினர் படத்தை வைத்து வருகின்றனர்.
இதே போன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திலும் புகைப்படங்களை அந்தந்த கட்சியினர் வைத்த போது, 11ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினரான மெய்யர் என்பவர், திடீரென ஏன் திரிஷாவின் படத்தை வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் ஆட்சி மாறியதற்கு காரணமே திரிஷாதான் என்றும், அவரது புகைப்படத்தை வைக்கவில்லை என்றால் வெளியே கலவரமே வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் திரிஷாதான் என்று கூறியதோடு, அவரது படத்தூஐ வைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.






















