என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார்.
சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.
கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று செய்திகள் வந்தன.
மருத்துவமனைக்குள் யாருக்கும் அனுமதி இல்லாத அந்த இக்கட்டான சூழலில், முன்னின்று போராடி அவரை மீட்டெடுத்த முழுப் பெருமையும் லிங்குசாமியையே சாரும்.

அதுமட்டுமின்றி, குணமடைந்த வசந்தபாலன் ஆனந்த விகடனில் இது பற்றி எழுதியிருந்தார்.
அதில் அவர், “மருத்துவமனையில் அனைவரும் நீல நிற ஆடை அணிந்து நடமாடிக் கொண்டிருந்தபோது, என்னை நோக்கி ஒருவர் வந்தார்.
எனது கலங்கிய கண்களோடு பார்க்கும்போது, அந்த நீல ஆடை அணிந்த மனிதர் எனக்கு ஒரு தேவதையைப் போலத் தெரிந்தார்.
அருகில் வந்த பின்புதான் தெரிந்தது, அவர் எனது நண்பன் லிங்குசாமி என்று” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளுக்குள்ளேயே ஒரு அழகான கவிதை ஒளிந்திருக்கிறது. அதுதான் லிங்குசாமி!” என்றார்.






















