இது தொடர்பாக நம்மிடையே பேசியவர், “இந்தச் சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழும் மனிதர்களை நாம் எந்தளவுக்கு மதிக்கிறோம் என்ற பெரிய கேள்வி எனக்குள் இருக்கிறது.
அவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இவரைப் போன்றவர்களின் பரந்த சிந்தனையையும் அறிவையும் பார்த்து ஈர்க்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக இவருக்கு நல்ல ஆதரவைத் தந்தார்கள்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, எங்களது அமைப்பு சார்பாக மறைந்த இயக்குநர் அருள்மொழி நினைவாக இவருக்கு விருதும், ரூபாய் 5,000 பணமும் வழங்கினோம். நாமும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் என்பதால், எதிர்காலத்தில் நமக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்ற பயம் இவரைப் பார்க்கும்போதெல்லாம் எழும். இவருடன் பழகிய நண்பர்கள் ஏன் இவரைத் தனிமையில் விட்டார்கள் என்று தெரியவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில் மயான ஊழியர்கள், பிரேதப் பரிசோதனை செய்வோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்தோம். லாக்டவுன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்.
மேலும், ஆதரவற்ற நிலையில் இறந்த பலரது உடல்களையும் நாங்களே அடக்கம் செய்தோம். நாங்கள் செய்யும் இந்தச் சேவைகளைப் பத்திரிகைகள் வாயிலாகத் தொடர்ந்து படித்து வந்த சத்யேந்திரா, என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.






















