கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் பி.ருமைதீன் ஃபைஜி, வேடியப்பன், கவிஞர் அ.வெண்ணிலா, பிருந்தாசாரதி எனப் பலரும் பங்கேற்றனர்.
டிஸ்கவரி புக் பேலஸ் இதை வெளியிட்டுள்ளது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் ராஜ்மோகன் பேசியதாவது, “பள்ளி கல்வித்துறை அமைச்சராக நான் இங்கு வரவில்லை. கவிஞர்கள் இல்லனா, பல குழந்தைகள் வன்முறை பாதையில் இருந்து விடுபட்டிருக்க முடியாது. நான் உள்பட. நான் படித்த கவிதைகள்தான். நான் சந்தித்த கவிஞர்கள் கொடுத்த பாதையில்தான் நான் வன்முறையில் இருந்து விலகி வந்தேன்.
சாதாரண சத்துணவு அமைப்பாளரின் மகனான நான், என்ன பண்ணுவேன்.. ஏது பண்ணுவேன் எனத் தெரியாமல் தமிழை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவன் நான். விஜய் டி.வி.யில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் அத்தனை பேச்சாளர்களையும் தோற்கடித்து தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர் என்ற டைட்டில் வின்னராகவும் வந்தேன் என்பதையும் இந்தப் பணிவோடு தெரிவித்துகொள்கிறேன்.
ஒரு சின்ன மேடை, ஒரு கவிதை, ஒரு புத்தகம், ஒரு குழந்தையினுடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். நல்ல கவிதை எழுதுபவர் மட்டும் கவிஞரல்ல. நல்ல கவிஞர்களை உருவாக்குபவர்களும் கவிஞர்கள்தான். நான் ஒரு ஸ்லோ லெனர். ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் படிப்பேன்.
தமிழ் இயல்பாக வந்ததால, அதைப் பற்றி மேலே வந்துட்டேன். நான், லிங்குசாமி சார் என தமிழ் காதலர்களை இணைந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயாதான். திரையுலகம் சார்பில் நடந்த கலைஞர் ஐயாவின் பிறந்த நாள் விழாவில் நான்தான் தொகுப்பாளர்”‘ என்று பேசினார்.
விழாவில் லிங்குசாமி பேசும் போது, “எங்களோடு பயணித்தவர் இன்று அமைச்சராக உயர்ந்திருப்பது பெருமையாக இருக்கு. நீங்க ஜெயிச்சிருவீங்க.. விஜய் சார் முதல்வராக வந்துடுவார் என்கிற அறிகுறி கடைசி பத்து நாட்களுக்கு முன்னரே எங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. இப்படியொரு மிகப்பெரிய மேஜிக் நிகழும்னு யாரும் எதிர்பார்க்கலை.
அவர் சினிமாவில் இருந்து அரசியலுக்குப் போயிட்டார். ஆனா ஜனங்க இப்ப அரசியலுக்கு வந்துட்டாங்க. சட்டசபை நிகழ்வைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. விஜய்சார் காலத்தோடு எவ்வளவு கனெக்ட்டிவா இருப்பார்னு முருகதாஸ் சாருக்கும் தெரியும்.
படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துல வருவார். அப்படியோரு டைமிங்கை கடைபிடிப்பார். அதனாலதான் காலம் அவங்களுக்கு ஒரு தனி இடம் கொடுத்திருக்கு” என்று பேசினார்.
நூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “எனக்கு ஹைக்கூ கவிதை படிக்க வரும். ரசிக்க வரும். என்னைப் பொறுத்தவரையில் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். பார்க்கும்போது இயக்குநராகத் தெரிவார். கிட்ட நெருங்கையில் கவிஞராக இருப்பார். இன்னும் நெருங்கிப் பார்த்தால் ஒரு மனிதாபிமானவர் என்பது ஒருசிலருக்கே தெரியும். ஒரு கவிதையில் ஏழ்மையைச் சொல்லமுடியும். புரட்சியையும், மனிதாபிமானத்தையும் சொல்லமுடியும்” எனக் கவிதையாகப் பேசி முடித்தார் முருகதாஸ்.
விழா குறித்து லிங்குசாமியிடம் பேசினோம்.
“இந்தக் கவிதைப் போட்டியின் ஒவ்வொரு ஆண்டும் எங்களுடன் ராஜ்மோகன் இருந்திருக்கிறார். இந்தாண்டு அமைச்சராக வந்து, கவிதைத் தொகுப்பை அவரே வெளியிட்டது மகிழ்ச்சியான தருணம்.
இந்தாண்டிற்கான கவிதைப் போட்டியில் 3350 கவிதைகளிலிருந்து 53 கவிதைகள் தேர்வு செய்து, ‘குட்டி வானம்’ என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறோம். கவிதைகளின் நடுவராக இயக்குநர் வசந்த பாலன், எழுத்தாளர்கள் அ. வெண்ணிலா, ரா. கண்ணன் ஆகியோர் இருந்தனர். அடுத்தாண்டு இதைவிட பிரமாண்டமாக நடத்த திட்டிமிட்டிருக்கிறோம்” என்றார்.






















