சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை பரவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ‘சர்தார் 2’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களைச் சந்தித்தனர். நடிகர்களைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி, “புதிய திரைப்படம் உடனடியாக ஆன்லைனில் வந்துவிடுவது சினிமாவைப் பாதிக்கிறது. தமிழக முதல்வர் திரைத்துறையில் இருந்து வந்தவர் என்பதால் இந்த விஷயம் அவருக்கு நிச்சயம் புரியும். இதுகுறித்து அவர் வலுவான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
சினிமாவில் நடிகர், இயக்குநர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊழியர்கள் என மிகப்பெரிய குழு இருக்கிறது. ஒரு படம் பாதிக்கப்படும்போது அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல; அது வாழ்க்கையைப் பற்றி சொல்லித்தரும் ஒரு கலை.
அந்தக் கலையைப் பாதுகாக்க வேண்டும். முதல்வரைச் சந்தித்தபோதுகூட, ‘அண்ணா… மற்றவர்களைவிட உங்களுக்கு இந்த விஷயம் நன்றாகத் தெரியும். நீங்களே நல்லா பார்த்துக்கோங்க’ என்று சொல்லியிருக்கிறோம். அவர் பார்த்துக்கொள்வார்” என்றார்.

அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி, “எதுக்கு இப்ப அதைப் பற்றி? நாம இருக்கிற வேலையை ஒழுங்காகப் பார்ப்போம். மக்களைச் சந்தோஷப்படுத்துவோம். நல்ல ஹிட் கொடுப்போம். அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.
கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “கார்த்தி என்றால் எனக்கு கோபம் வரும் என்று கேட்கிறீர்களா? ‘சர்தார் 2’ படத்தைப் பாருங்க… எல்லாருக்கும் புரியும்” எனச் சுவாரஸ்யமாகப் பதிலளித்தார்.
தொடர்ந்து, “நல்ல விஷயத்தைப் பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் அதைத் தொடர்ந்து ஃபாலோ செய்வதில்லை. ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யாமல் விட்டால் என்ன தவறு நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயமாக இருக்கும். ஒரு நல்ல விஷயம், பொறுப்பான விஷயம் படத்தில் இருக்கிறது.
சர்தாருக்குரிய கெட்டப்பில் கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நன்றாக இருக்கும். எனக்கும் யோகிபாபுவுக்கும் படத்தில் காட்சிகள் இருக்கின்றன” என்றார்.
























